Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மண்டலத்தில் 1000 என்.சி.சி. மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேவந்து சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் கரூர் நகரை சுற்றி உள்ள பகுதிகளான சுங்ககேட், திருமாநிலையூர் பஸ் நிலையம் ரவுண்டானா, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உறுதுணையாக கரூர் அரசு கல்லூரி உள்ளிட்ட கல்லூரி என்.சி.சி. மாணவர்களும் போலீசாருடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இவர்களின் பணியினை ஆய்வு செய்வதற்காக திருச்சி பட்டாலியன் கமாண்டர் கர்னல் இளவரசன் திருமாநிலையூர் ரவுண்டானா சோதனைச்சாவடிக்கு வந்தார். பின்னர் என்.சி.சி. மாணவர்களின் பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்; திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் 1000 என்.சி.சி. மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் கரூர் நகரப்பகுதிகளில் மட்டும் 53 என்.சி.சி. மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சோதனைச்சாவடிகளில் போலீசாருடன் இணைந்து பணிபுரிவது பொதுமக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.